வலைமனை பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய இரண்டாம் ஆண்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தீபத்திருநாளில்
வாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட
இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் வைகரைதென்றல்.
கிராமபுரங்களில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டுள்ளனர்.இதற்கு காரணம், நமது பாரம்பரிய நெறிமுறைகளை அவர்கள் தவறாமல் பின்பற்றுவதே ஆகும்.உடலிற்கு எண்ணெய் தேய்த்து குளிக்க்கும் போது , உடல் குளிர்ச்சி அடைவதுடன் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இந்தியா போன்ற வெப்பமிகுந்த நாடுகளில், நமது உடல்நிலையை சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
அன்றாட வாழ்க்கையில் நேரமின்மையின் காரணமாக, எண்ணெய் குளியலை தவிர்த்துவிடுகிறோம் ஆகவேதான், பண்டிகைகாலங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய தோல் பகுதி உலர்வடையாமல் ஈரப்பதத்துடனேயே இருக்க உதவுகிறது. இந்த ஈரப்பதம், கிருமிகள் நம் தோல்பகுதி மூலம் உடலுக்குள் ஊடுருவாமல் தடுக்கிறது.
சாதாரணமாக எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது
எண்ணெய் குளியலின் பிற நன்மைகள்:-
courtesy:Ask a doctor online
How often do you take oil bath?
Dear all,
Have you ever thought the need for oil bath in our busy schedule. In olden days our Grandmother used to run behind us with an oil bowl. Every weekend we used to take oil bath. But now that has changed. We take oil bath either on diwali or on any other festivals. It has become seasonal. And moreover we feel it as time consuming task to do it.
Let me tell you what all benefits you’ll have from oil bath.
அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதால்,
பூமியில் தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு, என பெங்களூரை சேர்ந்த தம்பதியர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி, சந்திரகிரகணமும், 22ம்தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மீண்டும் ஒரு சந்திரகிரகணமும் தொடர்ந்து வருகின்றன. இந்த நூற்றாண்டில், மிக நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய சூரிய கிரகணம் 22ம் தேதி வானில் காணப்படுகிறது.
மூன்று கிரகணங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்ட சமயங்களில் பூமியில் பல கெட்ட நிகழ்வுகள் ஏற்பட்டதாக பெங்களூரை சேர்ந்த ஹரி-ஹேமா தம்பதியர் தாங்கள் எழுதிய "வரலாறு திரும்புமா?' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். புராண காலத்தில் இதே போல மூன்று கிரகணங்கள் தோன்றிய போது மகாபாரத போர் ஏற்பட்டதாம். அதன் பின் ஏற்பட்ட தொடர் கிரகணங்களின் போது கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் மூழ்கியதாம்.
கடந்த 1910 மற்றும் 1945 ஆகிய கால கட்டங்களில் மூன்று கிரகணங்கள் ஏற்பட்ட போது முதல் மற்றும் இரண்டாம் உலக போர் ஏற்பட்டதாம். இந்த கால கட்டத்தில் தான், ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. வரும் 2020ம் ஆண்டு, காலத்திற்குள் ஆறு முறை, தொடர்ந்து மூன்று கிரகண நிகழ்வுகள் ஏற்பட உள்ளன. எனவே, இந்த காலகட்டத்தில் பல்வேறு தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளன, என இந்த தம்பதியர் தங்களது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களே, 23.12.2012 அன்று உலகம் அழியபோவதாக பல அறிவியல் & மேலை நாட்டுஜோதிட வல்லுனர்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர்.அதை மெய்பிக்கும்வகையில் இவர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மாயன் என்ற வரலாற்று காலண்டேரில் 21.12.2012 -க்கு பிறகு நாட்களை குறிக்கும் குறியீடுகளே இல்லையாம் மற்றும் GMT (Goodman-Martinez-Thompson) வகை கால குறிப்பேடிலும் 23.12.2012 -க்கு பிறகு நாட்கள் இல்லையாம். GMT என்பது தற்போதும் நம்மால் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி மேலும் அறிய www.survive2012.com என்ற இணையத்தில் காணவும். பல்வேறு சாத்தியகூறுகள் & விளக்கங்கள் அதில் உள்ளன. தற்போது இதைப்பற்றி ஒரு ஆங்கில படமே தயார் ஆகிவருவது உங்களுக்கு தெரியுமா?? அந்த படத்தின் பெயரும் 2012 தான்.அது வரும் செப்டெம்பரில் உலகெங்கும் திரைக்கு வருகிறது.சமீபத்தில் தான் அதன் ட்ரைலர் வெளியிடப்பட்டது. நீங்கள் அதை youtube -இல் ''2012 full trailer '' என்று டைப் செய்து சர்ச் செய்து பார்க்கவும். மிகவும் முக்கியமானது.ஆக, இந்த ட்ரைலர் மற்றும் அந்த இணையம் இரண்டையும் பார்க்கவும்
by mr Alanraj,United Arab Emirates
(நன்றி - தினமலர்)
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறந்த தந்தையரை பெருமைபடுத்தும் விதமாகவும், நன்றி கூறும் விதமாகவும் 1910ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பாசத்துக்கு எப்போதும் தாய்தான் உதாரணம். ஆனால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலும் குடும்ப பொருளாதாரம் தந்தையை சார்ந்தே உள்ளது.
இந்தியா முழுவதும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் தந்தை குடித்துவிட்டு தகராறு செய்வதால் மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ளனர். தந்தையையே குழந்தைகள் முன்மாதிரியாக கொள்கின்றனர். குடும்பத் தலைவரிடம் காணப்படும் ஒழுக்க குறைபாடு குழந்தைகளையே கடுமையாக பாதிக்கிறது. தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இந்த தினத்தை தந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவிலும் தந்தையர் தினம் பிரபலமடைந்து வருகிறது. பெருநகரங்களில் தந்தையர் தினத்தை பற்றிய விழிப்புணர்வு காணப்படுகிறது. சில பள்ளிகள் தந்தையர் தினத்தின் போது குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. சிறிய வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டுமென ஊக்குவிக்கப்படுகின்றனர்.
(நன்றி - தினமலர்)
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை 7.10 மணிக்கு நடந்தது. பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆட்டம், பாட்டத்துடன் தண்ணீர் பீய்ச்சி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பிறகு மே 7ல் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். நேற்று காலை மூன்று மாவடியில் அவரை பக்தர்கள் எதிர்க்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளினார். அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. பின் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
அங்கிருந்து தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலுக்கு வந்த அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின் தங்க குதிரையில் ஒவ்வொரு மண்டக படிகளிலும் சென்று வந்தார். இதற்கிடையே அழகரை வரவேற்க வெள்ளி குதிரையில் வீரராகவ பெருமாள் காலை 6.50 மணிக்கு ஆற்றுக்கு வந்தார்.
காலை 7.10 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி "கோவிந்தா... கோவிந்தா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே வைகையாற்றில் இறங்கினார். சுற்றியிருந்த பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட மண்டகப்படியை சுற்றி வந்து அருள்பாலித்தார். இதைதொடர்ந்து வீரராகவ பெருமாள் 3 முறை அழகரை வலம் வந்து முதல் மரியாதை ஏற்றுக்கொண்டார். தீபாராதனைக்கு பிறகு காலை 8 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.
அங்கு மதியம் தீர்த்தவாரி உற்சவமும், அங்கப் பிரதட்சணமும் நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.
நாளை(மே 10) காலை 7 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின் மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் திருமஞ்சனமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கறார். இரவு மீண்டும் ராமாயர் மண்டபத்திற்கு திரும்பும் அழகருக்கு 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை மறுநாள் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்பட்டு மே 14 காலை10 மணிக்கு கோயிலை சென்றடைகிறார்.
(நன்றி - தினமலர்)
அழகரின் "குதிரை' ரகசியம்: பாவ விமோசனம் தரும் சித்ரா பவுர்ணமி நன்னாளான இன்று, காலை கள்ளழகர் குதிரையில் வந்து வைகையாற்றில் இறங்கினார். குதிரையை போர்வீரர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அழகரும் ஒரு போர் வீரரே! ஆம்..மானிடர்களாகிய நாம் பலவித கெட்ட குணங்களுடனும், "நான்' என்ற ஆணவ குணத்துடனும் வாழ்கிறோம். அதனால், பல பாவங்களைச் செய்கிறோம்.
நமக்குள் உறைந்து கிடக்கும் இந்த கெட்ட குணங்களுடன் போரிட்டு, பாவச்சுமையைக் குறைக்கவே அவர் குதிரை மீதேறி வந்திருக்கிறார். அவரது குதிரையின் நான்கு கால்களும் தர்மப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ வேண்டும், அதன் மூலம் இன்பம் பெற வேண்டும், பாவமற்ற வாழ்க்கை பிறப்பற்ற நிலையை நல்கும் என்ற நான்கு நிலைகளாக (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) உள்ளன. குதிரையின் ஒரு காது எதைக் கேட்கலாம் என்பதையும், மற்றொரு காது அதன் விளைவுகளையும் (பாவ, புண்ணியம்) குறிக்கிறது. அதன் கண்கள் எதைக் காண வேண்டும் என்பதையும், அதனால் கிடைக்கப் போகும் கண்ணுக்குத் தெரியாத பலன்களையும் தெரிவிக்கின்றன.
குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட சலங்கைகளும், காலில் கட்டிய சிலம்புகளும் இறைவனை மந்திர ஒலி எழுப்பி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார். அதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப்பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு ஓடும் மானிடர்களுக்கு "சோதனை' என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது. குதிரையின் முதுகில் அவர் அமர்ந்துள்ளது, "அனைத்துலகும் தனக்குள் அடக்கம்' என்பதைக் காட்டுகிறது. அழகரை, இந்த ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், அவர் உடுத்தியுள்ள பட்டு வஸ்திரம் போல், இவ்வுலகில் செல்வவளமும், மறு உலகில் தெய்வநிலையும் பெற்று உய்வடைவர்.
(நன்றி - தினமலர்)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. சித்திரைத் திருவிழா ஏப்., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 3ல் அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே 5ல் திருக்கல்யாணமும் நடந்தது. இரவு மாசி வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம் வந்து இரவு 12.30 மணியளவில் கோவிலுக்கு திரும்பினர். நேற்று தேரோட்டம் என்பதால் உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. சித்திரைத் திருவிழாவிற்கென காப்பு கட்டிய பட்டர்கள் அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்தனர்.
தேர்களை பாதுகாத்துவரும் தேரடி கறுப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...' என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே சுவாமி தேர் காலை 6.05 மணிக்கு புறப்பட்டது. ஆடி அசைந்து விளக்குத்தூண் சந்திப்பிற்கு வர, காலை 7.05 மணிக்கு அம்மன் தேர் புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து காலை 11 மணிக்கு அடுத்தடுத்து நிலைக்கு வந்தன.
அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த விலை மதிப்புடைய கற்கள் பதித்த நகைகள் அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம். தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும்போது அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் மாலை 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கிரீடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்பட்டன. நேற்று பிரதோஷம் என்பதால் கோவிலுக்கு இருவரும் திரும்பியவுடன் பிரதோஷ அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் இருவரும் உலா வந்தனர். கோவிலுக்கு திரும்பிய பிறகு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று(மே 7) கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது
(நன்றி - தினமலர்)
காணக் கிடைக்காத காட்சி இன்று மட்டுமே: மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான இன்று, நமது அன்னை மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.
சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது. ஆறாம் திருவிழாவிலும் ரிஷபமே பவனி வந்தது. எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் விடவே கூடாது. ஆறாம் திருநாளில் தவற விட்டவர்கள் இன்று அவசியம் தரிசித்து விடுங்கள். அந்தளவுக்கு புண்ணியமான தரிசனம் இது.
ரிஷபம் என்னும் காளை தர்மத்தின் சின்னமாகும். இதன் கட்டான உடல் நமக்கு திட மனது வேண்டும் என்பதையும், கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதைத் தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும், காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும், ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும், கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள், இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன.
ரிஷபத்தை "அற விடை' என்பர். "அறம்' என்றால் "தானதர்மம்' மட்டுமல்ல. தர்மம் தவறாமல் வாழ வேண்டும் என்பதையும் குறிக்கிறது. தர்மம் தவறாமல் வாழ்பவரே புண்ணியத்தை அடைவதற்கு தகுதியு டையவர். அதனால் தான் தர்மமே இறைவனை சுமந்து வருவதாகச் சொல்வர். மற்ற தரிசனங்கள் எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால், ரிஷப தரிசனம் மட்டும் ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால், இவ்வுலகில் என் னென்ன தான தர்மங்கள் உண்டோ, அத்தனையும் செய்த புண்ணியமும் கிடைக்கும்.
இந்த புண்ணியத்தை, தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது. மீனாட்சியம்மைக்கு வைகையின் தென்கரையில் விழா எடுத்து அவளது அருளைப் பெற்று மகிழ்ந்த நாம், சுந்தரராஜப் பெருமாளாகிய அழகரை எதிர்கொண்டு அழைக்க நாளை வடகரைக்குச் செல்வோம்.
(நன்றி - தினமலர்)
அழகர்கோவில்: கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். மே 9ம் தேதி காலை 7 மணிக்கு மேல் வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்திரை திருவிழா மே 5ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்களும் தோளுக்கினியாள் திருக்கோலத்தில் தோன்றிய பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் முக்கிய விழாவான ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மாலை 6 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப் பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா' கோஷம் முழங்க கள்ளழகரை தரிசித்தனர். பின் 18ம் படி கருப்பண சுவாமி சன்னிதி முன்புள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழி நிகழ்ச்சியும், கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும் நடந்தன. சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் முடிந்து கோவில் காவல் தெய்வமான கருப்பண சுவாமியிடம் உத்தரவு பெற்று இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.
எதிர்சேவை: இரவு 11 மணிக்கு அப்பன் திருப்பதி சீனிவாச கல்யாண பெருமாள் கோவில் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு கள்ளழகர் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து புதூரிலும், மாலையில் தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வரும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.
வைகை ஆற்றில் இறங்குறார்: மே 9ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னிதி எதிரில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு வழியில் உள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் லட்சக் கணக்கான பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின் காலை 11 மணிக்கு ராமராயர் மண்டகபடி சென்றடைகிறார். அங்கு பக்தர்களின் தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சியும், அங்கப்பிரதட்சணமும் நடக்கிறது. அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.
(நன்றி - தினமலர்)
மங்கலநாண் சூடும் மதுரை மீனாட்சி: மதுரையில் மங்கல மீனாட்சி மங்கலநாண் சூடிக்கொண்ட நன்னாள் இன்று. வீட்டில் நம் பெற்றவர்களுக்கு நாம் சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் நம் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகளான நாமெல்லாம் இன்று திருக்கல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.
மலையத்துவஜனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டிக்கு பட்டம் சூட்டினான் மன்னன். எட்டுத்திக்கும் வெற்றி நிலைநாட்ட திக்விஜயம் புறப்பட்டாள் தேவி. கயிலைநாதனைக் கண்டாள். தனக்குஉரிய மணாளன் இவரே என்று அறிந்தாள். நல்லநாளில் முகூர்த்த வேளையில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மைக்கும், அப்பனுக்கும்திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்த மதுரையம்பதியில் எல்லா மக்களும் கூடினார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கேசனின் கரம் பிடித்தாள்.
சக்தியில்லாமல் சிவமில்லை. சிவமில்லாமல் சக்தியில்லை. சக்தியும் சிவமும் இணைந்தால் தானே உலக இயக்கமே நடக்கிறது. இதை நமக்கு உணர்த்தவே அம்மையப்பராக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்துகிறோம்.
உலக உயிர்க்குலங்கள் அனைத்தும் உமையவளின் பிள்ளைகள். ""என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே'' என்பார் மணிவாசகப்பெருமான். ஆம்! நாம் கண்கள் பெற்ற பயனை, இன்று அம்மையப்பரை திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்ததன் மூலம் அடைந்திருக்கிறோம். அபிராமி பட்டர் தன் அந்தாதியில், ""கண்களிக்கும்படி கடம்பாடவியில் (கடம்பவனமாகிய மதுரையில்) கண்டேன்'' என்று குறிப்பிடுகிறார். இத்தலத்தில் நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தையே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கருத வேண்டிஉள்ளது.
உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.
மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும். எல்லோராலும் கோயிலுக்குள் நுழைந்து மணக்கோலம் காண்பதென்பது நடக்கிற ஒன்றா! இதற்காகவே, புதுமாப்பிள்ளை சுந்தரேசர் இன்று இரவு யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் வலம் வந்து அருள் செய்வார்கள். நாம் நெரிசல் இல்லாமல் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு அவர்களை வணங்கி மகிழ்வோமே!
( நன்றி - தினமலர்)
வாடகை என்ன தர வேண்டும்: நானே உலகத்தின் அதிபதி என்ற முறையில், இன்று அன்னை மீனாட்சி பட்டம் சூடிக்கொள்கிறாள். அதனால் தான் இன்று சுவாமியும், அன்னையும் இன்று வெள்ளி சிம்மாசன வாகனத்தில் பவனி வருகின்றனர். அவளுக்கு மட்டும் தான் சிம்மாசனம் இருக்கிறதா? அவள் தன் குடிமக்களும் நன்றாக இருக்க வேண்டுமே என்பதற்காக, சூரியன், சந்திரன், நதி, கடல் என சகல வசதிகளையும் கொண்ட விலை மதிப்பு மிக்க உலகத்தையும் தந்திருக்கிறாள். ஆனால், என்ன தான் இருந்தாலும் சும்மா தருவாளா? ஒருவரது இடத்தில் நாம் தங்கினால் அதற்கு வாடகை கொடுத்தாக வேண்டுமே! அதுபோல் அவளும் நம்மிடம் வாடகை எதிர்பார்க்கிறாள். அந்த வாடகை எவ்வளவு என்பதை நமக்கு தெரிய வைப்பதே எட்டாம் திருவிழா. இறைவனுக்கு எட்டு வகை குணங்கள் உண்டு. அந்த எட்டு குணங்களும் நம்மிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். அவை என்னென்ன?
முற்றும் உணர்தல்: நாம் யார், நமக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது, இங்கேயே தங்க வேண்டும் என்று நினைக்கிறாமே! இது நியாயமா என்று உணர்வது. வரம்பில் இன்பமுடைமை: நமக்கென ஆண்டவன் இவ்வளவு ஆயுள், இவ்வளவு வசதி வாய்ப்பு என நிர்ணயித்துள்ளான். அந்தக் காலத்தையும், வசதியையும் வரம்பு மீறிய செயல்களுக்கு பயன்படுத்தாமல் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துதல். பாசத்தை விட்டு நீங்குதல்: நாம் குடும்பத்திற்கு வேண்டிய பணிவிடையைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் நன்றி மறந்தாலோ, பிரிந்து சென்றாலோ, நாமே பிரிய வேண்டிய நிலை வந்தாலோ, அந்த உறுப்பினர்களில் ஒருவரை இழக்க வேண்டி வந்தாலோ வருத்தப்படாத தன்மை.
முடிவில் ஆற்றல் உடைமை: எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்து சாதித்தல். தன் வசப்படுதல்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து உறுப்புகளும் நமக்கு வசப்பட்டு இருத்தல். பேரருள் உடைமை: பிறர் மீது அன்பு செலுத்துதல். இயற்கை உணர்வுடைமை: என்ன நடந்தாலும் "இது உலக இயற்கை தானே' என்று எளிதாக எடுத்துக் கொள்ளுதல்.
தூய உடம்புடையனாதல்: இவ்வுலக வாழ்வு உனக்குச் சொந்தம் என்ற மாய எண்ணத்தை விட்டு இறைவனால் தரப்பட்ட இவ்வுடலை மீண்டும் அவனிடமே சேர்க்க வேண்டும் என உணருதல். இந்த எட்டு குணங்களும் நம்மில் அநேகரிடம் இல்லை. ஏன்...இதுபற்றி சிந்தித்துக் கூட பார்த்ததில்லை. ""எங்களிடம் இந்த குணங்களே இல்லை. எனவே, உனக்கு பலநாள் வாடகை பாக்கி வைத்துள்ளோம். இந்த எட்டு குணங்களையும் எங்களுக்கு தந்து உன் வாடகையை கழித்துக்கொள்,'' என இந்நாளில் தாய் மீனாட்சியிடமும், தந்தை சுந்தரேஸ்வரரிடமும் கேட்க வேண்டும்.
( நன்றி - தினமலர்)
ஏழ்பிறப்பும் இணையும் ஒரே சொந்தம்: "ஏழேழு பிறவியிலும் நாம் இணைந்திருப் போம்' என்று அன்புமிக்க கணவனும் மனைவியும் பேசிக் கொள்வார்கள். ஆனால், இது நடக்கப் போகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. நம் மதுரைத் தாய் மீனாட்சியைப் பெற்ற அன்னை காஞ்சனமாலைக்கே இந்த கொடுப் பினை இல்லையே! அவள் முற்பிறப்பில் கந்தர்வக்கன்னியாக இருந்தாள். மறுபிறப்பில் மானிட ஜென்மம் எடுத்து மலையத்துவஜனின் மனைவியானாள். ஆனால், ஏழுபிறப்பிலும் ஒரே ஒரு சொந்தம் மட்டுமே தொடரும். அது தான் அன்னை மீனாட்சிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. இது பிரிக்க முடியாத பந்தமாக இருக்கிறது.
இந்த பந்தம் நிரந்தரமாக வேண்டுமென்றால் பிறவிகளை அறுத்தெறிந்து விட்டால், நாம் மீனாட்சியுடனும், சுந்தரேஸ்வரருடனும் இரண்டறக் கலந்து விடலாம். நமக்கு ஏழு பிறப்புகள் மட்டுமல்ல, ஏழு வகை பிறவிகளும் ஏற்படுகின்றன. அவரவர் செய்த தீவினை, நல்வினைக்கேற்ப தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோம். இந்த ஏழுவகை பிறவியுமே தொல்லை தருவது தான். தாவரமாய் பிறந்தால் தண்ணீரின்றி தவிக்க வேண்டி வரும் அல்லது வெள்ளத்தில் மூழ்க வேண்டியிருக்கும்! பூச்சியாகப் பிறந்தால் பிறர் காலில் மிதிபட்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்! தேவராகப் பிறந்தால் அசுரர்களால் அல்லல்பட வேண்டியிருக்கும்! எனவே இறைவனிடம், ""ஆண்டவா! ஏழாம் திருநாளான இன்று ஏழுவகை பிறவியுமே எனக்கு வேண்டாம். பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை கொடு. அதுவரை எங்களைச் செல்வச்செழிப்புடன் வாழ வை,'' என்று பிரார்த்திக்க வேண்டும். இன்று அன்னை மீனாட்சி யாளி வாகனத்திலும், சுந்தரேஸ் வரர் நந்திகேஸ்வரர் வாகனத்திலும் பவனி வருகிறார்கள்.
(நன்றி - தினமலர்)
நல்ல பாதை காட்டும் ஆறாம் திருவிழா: இன்று அம்பாளும் சுவாமியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வருவதை தரிசிப்பது பெரும் புண்ணியத்தை தரும். இதற்கு ஈடு இணையே கிடையாது.
சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர்.
"சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திருக்கிறது என்று அர்த்தமாகிறது.
நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம்( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்துவார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம்.
(நன்றி - தினமலர்)
ஐந்தாம் திருநாள் கொண்டாட்டம்: இன்று சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள். மதுரையின் தாய் மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர்.
இன்றைய தினம் அவர்களிடம் நமது வேண்டுகோள் என்னவாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள் வோம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் மனிதனை ஆட்டுவிக்கின் றன. அதாவது, உடல் இன்பத்தை தேடி அலைகிறது. வாய் என்னென் னவோ பேசுகிறது, எதை எதையோ சாப்பிடுகிறது. கண்கள் பார்க்கக் கூடாத அனைத்தையும் பார்க்கிறது. மூக்கு தேவையற்ற வாசனைகளை நுகரத்துடிக்கிறது. செவி கண்ட கண்ட இசையையும், தேவையற்ற பேச்சுகளையும் கேட்கிறது. இந்த புலன்களெல்லாம் தவறான பாதையில் செல்வதால், மனம் அலைபாய்கிறது. எனவே, நமது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என மீனாட்சி தாயிடம் கேட்க வேண்டும்.
""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காலா மணிவிளக்கே'' என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார். "" நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும்போது, அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி, மனிதன் ஒளிவிளக்காக திகழ்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலிங்கமாகி விடுகிறது,''என்பது இந்தப் பாடலின் பொருள்.
இதை சூசகமாகக் காட்டத்தான் மற்ற நாட்களில் வெவ்வேறு வாகனங்களில் வரும் சுவாமியும், அம்பாளும் இன்று குதிரை வாகனத்தில் வருகின்றனர். (ஒரே வாகன சிறப்பு ரிஷபத்துக்கும் உண்டு) குதிரையை அடக்க கடிவாளம் இருப் பது போல, உங்கள் மனங்களையும் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்துங்கள் என்று அவர்கள் இந்த வாகனத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். நமக்கு இறைவனால் தரப்பட்ட உறுப்புகள் நல்லதை மட்டுமே செய்ய சுவாமியிடமும், அம்பாளிடமும் வரம் வேண்டுவோம்.
(நன்றி - தினமலர்)
மூன்றாம் நாள் திருவிழா நடத்துவது ஏன்: நமது வினைகளை (செயல்கள்) மூன்றாகப் பிரிக்கலாம். ஆன்மிகத் தில், இது, சஞ்சித வினை, பிராரத்துவ வினை, ஆகாமிய வினை என்பர். சஞ்சிதம் என்றால் நாம் இதுவரை பிறந்த பிறவிகளில் செய்த நற்செயல் மற்றும் தீயசெயல்களின் தொகுப்பாகும். பிராரத்துவம் என்பது சஞ்சிதத் தொகுப்பில் இருந்து இந்தப் பிறவிக்கென இறைவன் எடுத்துக் கொடுத்த ஒரு பகுதி. ஆகாமியம் என்பது, இப்போது நாம் புதிதாகச் செய்யும் நற்செயல் மற்றும் தீயசெயல்களின் சேர்க்கையாகும். நல்லது செய்தால் தேவர் முதலான பிறப்புகளை அடைய வேண்டி வரும்.
தேவராக இருந்தாலும் அசுரர்களால் துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். கெட்டது செய்தால் இந்த பூமியில் மீண்டும் கேவலமான பிறப்பைச் சந்தித்து இன்னும் துன்பப்பட வேண்டியிருக்கும். எனவே இவ்வகையான மூன்று செயல்களின் பலன்களில் இருந்தும் விடுதலை வேண்டும் என அன்னை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் பிரார்த்திக்க வேண்டும். ஐயம், விபரீதம், மயக்கம் என மூவகை புத்தி மனிதனுக்கு உண்டு. சந்தேகப்பட்டால் விபரீதம் நிகழும். இதனால் அறிவு மயங்கி தவறான முடிவுக்கு வரும். இந்த ஆபத்தான போக்கில் இருந்து புத்தியை நல்வழியில் திருப்பும்படி இறைவனிடம் கேட்க வேண்டும். சாந்தம், மிருககுணம், சோம்பல் என குணங்கள் மூவகைப்படும். பின் இரண்டு குணங்களும் ஆபத்தைத் தரும் என்பது அனைவரும் அறிந்தது தான்! அதிகமாக சாந்தமாக இருப்பதும் உயிருக்கு ஆபத்தே. எனவே, இந்த குணங்களை விடுத்து, இறைவனை அடைய வேண்டும் என்ற ஒரே குணம் மட்டும் போது மென மீனாட்சியிடம் கேட்க வேண்டும்.
முற்பிறப்பு, இப்பிறப்பு , வரும் பிறப்பு ஆகிய பிறப்புகளில் இருந்தும், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று ஆசைகளில் இருந் தும் விடுபட வேண்டும் என்ற ஞானத்தைக் கேட்க வேண்டும். மூன்றாம் திருநாள் உணர்த்தும் தத்துவம் இதுவே. இன்று அன்னை மீனாட்சி காமதேனு வாகனத்திலும், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் வருகின்றனர். காமதேனு எதைக் கேட்டாலும் கொடுப்பது. மேற்கண்ட மூவகை துன்பங்களும் அகல வேண்டும் என்று அம்பாளிடம் கேட்டால் நிச்சயமாய் அந்த வரத்தை அருள்வாள்.
(நன்றி - தினமலர்)
கொடியேற்ற தத்துவம்: கோயில்களில் பிரம்மோற்ஸவம் துவங்கும்போது, முதல் நாள் கொடியேற்றப்படும். எதற்காக கொடியேற்றுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
கொடிமரம் என்பது இறைவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும். உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) குறிக்கும். மனிதர்களாகிய நாம் கடவுளை அடைவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால், நம்மை அவரிடம் கொண்டு சேர்க்க சக்திதேவி உதவுவாள். அவளிடம் போய் நாம் அழுதுவிட்டால் போதும். பிள்ளைகளின் கண்ணீரைத் தாய் பொறுக்கமாட்டாள். அவள் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுவாள்.
ஒரு வீட்டில், பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால், தந்தையிடம் போகமாட்டார்கள். அம்மாவிடம் சொல்லி, அதைக் கேட்டு பெற்றுக் கொள்வார்கள். அதே போன்றது தான் இறைவனை அடையும் நிலையும்! கொடி மேலே ஏறியதும், கம்பத்தோடு ஒட்டிக்கிடக்கும். அதாவது, நாம் இறைவனை கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது இதற்கு பொருள். என்னதான் நாம் இறைவனோடு ஒன்றியிருந்தாலும் அல்லது தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும், நம் மனம் அலைபாய்வது இயல்பு தான். அப்படி அலைபாயும் மனது எங்காவது சுற்றிவிட்டு, மீண்டும் இறைவனையே வந்து சேரும்.
இதைத்தான் "கொடித் தடை' என்பார்கள். கொடியேறியபிறகு வெளியூருக்குச் சென்றாலும் இரவுக்குள் ஊர் திரும்புவது வழக்கமாக உள்ளது. அதாவது, இறைவனோடு ஒட்டிக்கிடக்கும் உயிர்களின் மனது எங்காவது சுற்றப் போனாலும் கூட மீண்டும் இறைவனையே அடைந்து விடுவதை இது குறிக்கிறது. சிவபெருமானை ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்று சொல்லி வணங்குகிறோம். "சி' என்பது சிவபெருமானையும், "வ' என்பது அம்பாளையும், "ய' என்பது கொடியில் வரையப்பட்ட நந்திதேவரையும், "ந' என்பது கொடிச்சீலையையும், "ம' என்பது தர்ப்பைக்கயிறையும் குறிக்கும். கொடிமரத்தின் அடியில் தர்ப்பைக்கயிறு இருக்கும்.
இந்தக் கயிறை பாசத்துக்கு ஒப்பிடுவார்கள். மனைவி, மக்கள், உறவு, பொருட்கள் ஆகியவற்றின் மீது கொண்ட பாசம் தான் நம்மை இறைவனை அடையவிடாமல் தடுக்கிறது. இந்த பாசப்பிணைப்பில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்பதால் தான் தர்ப்பையை கயிறுபோல் சுருட்டி கீழே வைத்திருப்பார்கள்.
(நன்றி - தினமலர்)
மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர்.
கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.
கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறை யை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.
அஷ்டசக்தி மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்கு நுழையும்போது முதலில் வரும் மண்டபமே அஷ்டசக்தி மண்டபமாகும். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் காட்சியளிக்கின்றனர்.
இவர்களை வணங்குவோர் தைரியமாக இருப்பர் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அன்னதான மண்டபமாக இருந்தது. பிற்காலத்தில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் தானம் செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்ற பெயர் இப்போதும் இருக்கிறது.
மீனாட்சி நாயக்கர் மண்டபம்: அஷ்டசக்தி மண்டபத்தை அடுத்து அமைந்துள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இதன் நீளம் 160 அடி. ஆறு வரிசைகளாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி கட்டம் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டியதால் இந்த பெயர் பெற்றது.
முதலி மண்டபம்: இந்த மண்டபத்தை கடந்தை முதலியார் கட்டினார். சிவபெருமான் பிட்சாடணராக இங்கு காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஊஞ்சல் மண்டபம்: அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் இதை கட்டினார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளவாயான ராமப்ப அய்யர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கிலி மண்டபம்: அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. இதில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சொக்கநாதர் கருவறைக்கு வடக்கே கரியமாணிக்க பெருமாள் கோயில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த கோயிலின் தூண்களாக இவை இருக்கக்கூடும் என ஒரு கருத்து நிலவுகிறது. நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்டுள்ளதால் அவர்களும் இதை நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
நூற்றுக்கால் மண்டபம்: இந்த மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. நடராஜ பெருமான் இங்கு நடனம் ஆடுகிறார். தற்போது இந்த மண்டபம் தியான மண்டபமாக உள்ளது. சுவாமி சன்னதிக்கு வெளியே கொடிமரத்தின் அருகே அமைந்துள்ளது. 1526ல் சின்னப்ப நாயக்கர் இதை கட்டினார்.
புது மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் எதிரே உள்ள மண்டபத்தை "புது மண்டபம்' என்பர். இதன் உண்மை பெயர் "வசந்த மண்டபம்'. கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் தண்ணீரை நிரப்புவர். அப்போது மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.
அனேகமாக இந்த மண்டபம்தான் மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால் "புது மண்டபம்' என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபம் 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப் பட்டது. திருவிழா காலங்களில் இந்த மண்டபத்தில்தான் சுவாமி எழுந்தருளி இருக்கிறார்.
ராவண அனுக்ரஹ மூர்த்தி, திரிபுராந்தகர், காளி, கல்யாண சுந்தரேஸ்வரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை, கல்யானைக்கு கரும்பு கொடுத்தது, பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்தது, புலியை மான்குட்டிகளுக்கு பால்கொடுக்கச் செய்த லீலை, வியாக்ரபாதர், பதஞ்சலி, வாயற்காவலர்கள், தடாதகை பிராட்டி, சுந்தரேஸ்வரர், சந்திரன், சூரியன், ஏகபாதமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, குதிரை வீரர்கள், யாழிகள், மனைவியருடன் திருமலை நாயக்கர் மற்றும் ஒன்பது நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
(நன்றி-தினமலர்)
மீனாட்சி கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் மிகவும் அதிசயப்படுவீர்கள். உங்கள் ஊரில் பாலாறு ஓடுகிறதா, தேனாறு ஓடுகிறதா என்று மேடைகளில் பேசி கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம்.
ககோளம் : சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது.
மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகத்தை பாதுகாப்பதற்காக தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்த விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது.
அக்கால தேவர் உலகை இந்த ஓவியத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஓவியத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.
பூகோளம் : இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பதுபோல மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது.
பாற்கடல், எண்ணெய்க்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை இந்த ஓவியத்தில் பார்க்கலாம்.
கடம்ப மரம்
மீனாட்சிஅம்மன் கோயில் தோன்றிய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தனஞ்செயன் என்னும் வணிகன் கடம்பமரத்தின் அடியில் சொக்கநாதரைக் கண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சுவாமி சன்னதியில் உள்பிரகாரத்தில் துர்க்கை சன்னதியின் எதிரில் காய்ந்து போன நிலையில் மிகப்பழமையான கடம்ப மரம் ஒன்று இருக்கிறது.
இதனை பக்தர்கள் தொட்டு வழிபாடு செய்வதால் மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சுற்றிலும் கம்பிஅரண் போடப்பட்டுள்ளது. மேல கோபுரத்தில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் ஒரு கடம்பமரம் உள்ளது. நன்கு வளர்ந்து பருத்த மரமாக உள்ளது. பக்தர்கள் இந்த மரத்தை தரிசிப்பதுடன், வீட்டுக்கொரு மரம் நடவும், அதன் மூலம் மீனாட்சி பட்டணத்தின் மாசைக் குறைத்து, அவளது மதிப்பிற்குரியவர்களாக மாறவும் இந்த கும்பாபிஷேக நாளில் உறுதியெடுப்போம்.
தாயுமானவர் : கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் "தாயுமானவர்' எனப்படுவார். சிவபெருமானுக்கு "தாயுமானவர்' என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.
தூணில் சரபேஸ்வரர் : இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்.
மாறும் ஆட்சிகள்: ஒரு இல்லறம் நன்கு சிறக்க வேண்டுமானால் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவது அவசியம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் சுவாமி ஆட்சி ஆறு மாதங்களும், அம்மன் ஆட்சி ஆறு மாதங்களும் மாறி மாறி நடைபெற்று வந்தது. அக்காலத்தில் சித்திரை திருவிழா கிடையாது. மாசியில் தான் விழா நடந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போதும் மாசி வீதியில் தான் சித்திரை திருவிழா பவனி நடக்கிறது.
திருமலை நாயக்க மன்னர், சைவ, வைணவ ஒற்றுமை கருதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும், மீனாட்சி அம்மனின் மாசி திருவிழாவையும் சித்திரைக்கு மாற்றினார். விவசாயிகளின் ஓய்வுகாலம் கருதி சித்திரைக்கு விழாவை மாற்றியிருக்க வேண்டும். விழா மாற்றப்பட்ட பிறகு மீனாட்சியம்மனுக்கு சித்திரையிலும், சொக்கநாதருக்கு ஆவணியிலும் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
இதன் பிறகு அம்மன் சித்திரை முதல் 4 மாதமும், சுவாமி ஆவணி முதல் 8மாதங்களும் ஆட்சி புரிகின்றனர். மதுரையில் மீனாட்சிக்கே முக்கியத்துவம் என்றாலும், தன் கணவருக்கு ஆட்சிப்பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவள் விரும்பியதால் எட்டு மாதங்களாக மாறியது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ!
புதன் தலம்: நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக்
கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.
1877-ல் நடந்த கும்பாபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் தனது நினைவுகளை எழுதியுள்ளார். அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தார்கள். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மதுரைக்கு அன்றைய தினம் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் ஆகியோர் வந்திருந்தனர்.
நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர்.
கும்பாபிஷேகம் நடக்கும்போது கோயிலுக்குள் சென்றவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே தக்கவர்களுக்கு மட்டும் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். அப்போது மதுரையில் கலெக்டராக க்ரோல் துரை என்பவர் இருந்தார். அந்த சமயத்தில் மதுரை திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டு கோயிலைச் சுற்றி அசுத்தப் படுத்தினர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் செய்வித்த வெங்கடாசலம் செட்டியார் என்பவர் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி செய்ய முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. இதுகுறித்து மணி அய்யரிடம் தெரிவித்தார்.
அவர் மிக்க இரக்கமுடையவர். அவரிடம் செட்டியார், ""திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே. அதைச் சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக்காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்,'' என்று முறையிட்டு வந்தார். மணிஅய்யர் அவர் கூறுவதன் உண்மையையும், அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார்.
உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதில்புறத்தே இருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வாங்கித்தந்தும், வீடு கட்ட பணம் உதவியும், நிலத்திற்கு விலை தந்தும் அவர்களை திருப்தி செய்வித்தார். பின்னர் வசதியான இடங்களில் அவர்களை குடியேற்றி பாதுகாத்தார். பின்னர் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து இரும்பு வேலி போடச் செய்தார்..
(நன்றி- தினமலர்)
சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இந்த மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராஜர், சுகாசனர், காலசம்ஹாரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், கலியாணசுந்தரர், திரிபுராந்தகர், சங்கர நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், இடபாரூடர், ஏகபாதமூர்த்தி, சக்ரதரர், சலநீதரானுக்கிரர், தட்சிணாமூர்த்தி, கஜசம்ஹாரர், சண்டே சானுக்கிரர், சோமசுந்தரர், கிராதர்ச்சுனர், உருத்திரர், பிட்சாடனர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.
ஆயிரங்கால் மண்டபம்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு பெற்றது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய கோயில்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஆயிரங்கால் மண்டபம் பெற்ற சிறப்புடையது.
நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் இந்த மண்டபத்தை அமைத்தார். தொன்மையான பொருட்களின் களஞ்சியமாக இந்த கலைக்கூடம் இருக்கிறது. கண்ணப்பர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி உருவச்சிலைகள், இசைத்தூண்கள், அன்னத்தின்மீது அமர்ந்த ரதி ஆகிய சிலைகள் குறிப்பிடத்தக்கது.
புதுமண்டப சுருக்குப்பை ரகசியம் : "நீ தர்மத்தை காப்பாயானால் தர்மம் உன்னை காக்கும்' என்பர். தொழில் மீது பக்தியுடையவன், தன் தொழில்தர்மத்தையும், பழமையையும் காப்பதில் அக்கறை உடையவனாக இருக்க வேண்டும். இதை நிரூபிக்கும் வகையில், புதுமண்டபத்திலுள்ள தையல் கலைஞர்கள் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் கிராமத்துப் பெண்மணிகளின் "மணிபர்ஸான' சுருக்குப்பை தைக்கும் போது, பையினுள் சில்லரை காசு வைத்த பிறகு தான் தைக்க ஆரம்பிப்பார்கள். தங்களிடம் அவசரத்துக்கு சில்லரை இல்லாவிட்டாலும், யாரிடமாவது வாங்கி வைத்த பிறகு தான் தைப்பார்கள். இப்படி ஒரு வித்தியாசமான தொழில் தர்மம்! இப்போதும், சில கடைகளில் மணிபர்ஸ் வாங்குபவர்களுக்கு காசுகளை உள்ளே வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.
பொற்றாமரைக்குளம்
கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது.
சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த படித்துறை "பாண்டியன் படித்துறை' எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.
மாதப்பெயரில் வீதிகள்: மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார் களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.
இதில் ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து"ஆவணி மூல வீதி' என அழைக் கப்படுகிறது. சிவனின் திரு விளையாடல்களில் "பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியை சுற்றி வருகிறார்.
ஒரு நாள் மட்டும் யானை பவனி: மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி,
"யானை யானை அழகர் யானை
ஆடுமாம் சொக்கர் கொம்பானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை''
என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் இருக்கிறது.
முதல் திருவிளையாடல்: மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பவுர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.
(நன்றி-தினமலர்)
மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.
அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. "விபூதி' என்றால் "மேலான செல்வம்' என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இரட்டை விநாயகர்: மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
(நன்றி-தினமலர்)
18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், "எல்லாம் வல்ல சித்தர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.
உபதேச தெட்சிணாமூர்த்தி முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிவன், அஷ்டமாசித்திகளை உபதேசம் செய்தார். அவர்கள் அதனை மறந்து விட்டதால், கல்லாக மாறினர். தங்களுக்கு விமோசனம் வேண்டி பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) என்னும் தலத்தில் தவமிருந்தனர். அவர்களுக்கு இத்தலத்து சிவன், குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை மீண்டும் உபதேசித்தார். இவர் மதுரையில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் "உபதேச தெட்சிணாமூர்த்தி'யாக காட்சி தருகிறார். இவரை "வேததெட்சிணாமூர்த்தி' என்றும் அழைக்கிறார்கள்.
கொடிமரத்தில் சம்பந்தர்: சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோது, சம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார்.
சமண மதத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.
(நன்றி-தினமலர்)
"சதா' என்றால் "எப்போதும்' என பொருள். எங்கு திரும்பினாலும் சிவனின் முகம். எதைக்கேட்டாலும் "சிவசிவ' என்னும் மந்திர ஒலி. இதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டது "சதாசிவம்' சிலை. இந்த சிலையை ஏழுநிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தில் காணலாம். திருநீறு விநாயகரை வணங்கிவிட்டு, அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் நின்று இந்த கோபுரத்தை கவனித்தால் அருமையான சதாசிவ தரிசனம் கிடைக்கும்.
அம்பிகை அணிவித்த மாலை : திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒரு சமயம் காசி யாத்திரை சென்றார். மதுரை வழியாக சென்ற அவர், இக்கோயிலுக்கு வந்தார். மீனாட்சியை வணங்கிய அவர், "பிள்ளைத்தமிழ்' பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.
அவருக்கு தன் கழுத்தில் அணிந்துஇருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சன்னதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியது, அம்பிகை மாலை அணிவித்தது ஆகிய நிகழ்ச்சிகளை அம்பாள் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் ஓவியமாக காணலாம்.
இருபதாம் நூற்றாண்டில் நடந்த கும்பாபிஷேகங்கள்
1.7.1923 (ருத்ரோத்காரி ஆண்டு, ஆனி 17, புதன்கிழமை)
28.8.1963 (சோபகிருது ஆண்டு, ஆவணி 12, புதன்கிழமை)
26.6.1974 (ஆனந்த ஆண்டு, ஆனி 12, புதன்கிழமை)
7.7.1995 (யுவ ஆண்டு, ஆனி 23, வெள்ளிக்கிழமை)
கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி : அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பது போல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!
மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தை கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர்.
நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.
ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.
மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது "ஆனந்த சாகர ஸ்தவம் ' என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.
எட்டுகாலம் எட்டு கோலம்: தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.
இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா�ஷாடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
கிளி ஏந்திய காரணம்
ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.
சித்திரைத் திருவிழா ஒரு சிறப்பு கண்ணோட்டம்
மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
மீனாட்சி அம்மனுக்கு கல்யாணம் : மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மன், அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே நின்று அவரே தனது மணாளன் என அறிந்து மணந்து கொள்கிறார். இந்த நிகழ்வு சித்திரைத்திருவிழாவில் நடக்கிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள்.
பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.
இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
(நன்றி - தினமலர்)