Wednesday, May 5, 2010

யானையின் உச்சி முதல் பாதம் வரை

 image image

யானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால் கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், 'மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங் கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை.

'பேச்சலர்' யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட 'பேச்சலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப் புடன் வளர்க்கக்கூடியவை.

அடுத்த 'சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு 'பதவிக்கு' வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை 'மக்னா' என்கின் றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், 'வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

தொடர்பு கொள்வதில்கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும்திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது 'கிரீச்... கிரீச்...' என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை 'வாசம்' பிடிக்கும்.

தோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.

காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் 'டென்ஷன்' ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் 'எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.

தும்பிக்கையே நம்பிக்கை: வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துதிக்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.

காதை ஆட்டுவதன் ரகசியம்: யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங் களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும்.இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.

தவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.

மதம் மூன்று மாதம்: ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே 'ஹனிமூன்' செல்லும்.

அங்குசம் தேவையா? பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.

பாலித்தீனால் பலியாகும் யானை: பரவலான மலைப்பகுதிகள் இல் லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.

அதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.

யானையை பாதுகாப்பது முக்கியம்: யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.

யானைகளின் பரிணாம வளர்ச்சி:குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.

பல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.

ஆசியா யானைகளின் மொத்த எண்ணிக்கை:50,000 இந்தியா:27,500 - 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்:3500 - 4000

இரட்டையர்களும் உண்டு:யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில் 'மேஜராகி' விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிப் போடும்.தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18-22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90-125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்.

ஆப்ரிக்கா, ஆசியா யானைகள் ஒப்பீடு:உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.

ஆசியா யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும்.ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.

( நன்றி - தினமலர்)